சென்னை; தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது என அறிவித்தார்.  இந்த கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கான இருக்ககைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சட்டமன்ற மரபுப்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பேரவையில் அமர வைக்கப்படுவர். சட்டப்பேரவை கூடும்போது அதிமுக விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என கூறியவர், அதிமுக கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பிடமும் விளக்கம் கேட்பது ஆய்வில் உள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும் என்றார்.

சட்டப்பேரவை தொடரில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக கூறிய அப்பாவு, அவர்கள் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதை நினைவு கூர்ந்தார்.

சட்டசபையை எத்தனை நாள் நடத்துவது என்பது, வரும் 17-ஆம் தேதி  நடைபெற உள்ள அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.