சென்னை:
மிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் இன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 (1967) ஆம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பின் படி, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா இன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. ​

​கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரியவகை தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இவ்விழாவினையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்மிக்க மணற்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது.

கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மணற்சிற்பம் உருவாக்கப்படும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, செம்மொழிப் பூங்கா மற்றும் சென்டரல் சதுக்கம் ஆகிய 4 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படுகிறது.

சென்னை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி ஆகியவை இன்று முதல் 20.07.2022 வரை மூன்று நாட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.