டில்லி,

ச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து நாடு முழுவதும் உச்சநீதி மன்றம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.  இந்தியாவில்  நீதியின் ஸ்திரத்தன்மை கேள்விக்குரியதாகி  உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று கூறி உள்ளார்.

அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

நாம் அவர்களை விமர்சிக்க முடியாது, அவர்களில் பலர்  தங்களது சட்டப்பூர்வ வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர்.  அவர்கள் ஆலோசனையாளர்களாக இருந்து பணம் சம்பாதித்திருக்கலாம்.  நாம் அவர்களை மதிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டை சேர்ந்த   4 நீதிபதிகள் தலைமை நீதிபதி மீது கூறிய கருத்து குறித்து பிரதமர் தலையிட்டு தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் நேற்று  செய்தியாளர்களை சந்தித்து, தலைமைநீதிபதியின் செயல்பாடு மீது அதிருப்தி கொண்டு  பேட்டி கொடுத்தனர்.

அப்போது,  உச்சநீதி மன்றத்தில் கடந்த சில மாதங்களாக  விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய் ஆகிய 4 நீதிபதிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே எடுப்பதாகவும், இப்படியே போனால் ஜனநாயகம் தலைக்காது என்ற நீதிபதிகள், மேலும், நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கும் எதிர்ப்பு தெரிவிதனர்.  வரலாற்றில் இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வேறு வழியே இல்லாததால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம் என்றார்.

இதுகுறித்து  சில மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் பதில் இல்லை என்ற அவர்கள்,  வேறு வழியில்லாததால் இன்று  மக்கள் மத்தியில் பேச  முடிவெடுத்தாக கூறினர்.

தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து கருத்து தெரிவித்திருப்பது நாடு முழுவதும் நீதித்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.