டில்லி

துணை குடியரசுத் தலைவராக எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்‍காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்‍க நாளை தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்காரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளது. எதிர்க்‍கட்சிகளின் வேட்பாளரான மார்கரெட் ஆல்வா தனது டிவிட்டர் பக்‍கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஒவ்வொரு எம்.பிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தாம் குடியரசுத் துணைத் தலைவராகத் தான் தேர்வு செய்யப்பட்டால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்கப் பாடுபடுவேன் எனக் கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆதரவு அளித்துள்ளார். ஏற்கனவே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக, டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.