தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமியும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதோடு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

“சினிமா ரசனை கல்வியை நமது பாடதிட்டத்தில் இணைக்க வேண்டும். எது உண்மையான சினிமா கலை, அதை எப்படி பார்க்க வேண்டுமெனவும் மாணவ பருவத்தில் கற்றுத் தருதல் வேண்டும்.
உலகின் தலைசிறந்த படங்களின் வழியே பாடப்பிரிவுகள் உண்டாக்க வேண்டும்,

இது சினிமா தொழில் நுட்பக்கல்வி அல்ல. ரசனையை மேம்படுத்தும் கல்வி.

இக்கோரிக்கையை ஆசான் பாலுமகேந்திரா கலைஞரிடம் முன்வைத்தார். அதையே நான் அவர் புதல்வர் முதல்வரிடம் முன்வைக்கிறேன்.

தவிர, கர்நாடகா போல தேசிய விருதுப்பெற்ற சினிமா கலைஞர்களுக்கு ஒரு வீடு அரசு வழங்க வேண்டும். அது சென்னையில் கூட அல்ல ஏனெனில் இங்கு விலைஅதிகம் அரசுக்கு கூடுதல் செலவு.

அவர்கள் பிறந்த மாவட்டத்தில் தந்தால் மகிழ்வேன். இவ்விரு கோரிக்கைகள் முதல்வரின் கரங்களில் சேர்ப்பிக்கிறேன்” என்றார்.

மேலும் சீனு ராமசாமி, “சினிமா ரசனை கல்வியை (Film Appreciation) மாணவ மாணவியரின் பாடப்பிரிவில் இலக்கியம், இலக்கணம், ஓவியம், போல வெகுமக்களை ஆட்கொண்ட சினிமாவையும் சேர்க்க வேண்டுமென மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு, அன்பில் மகேஷ் பாடநூல் பிரிவின் தலைவர் திரு திண்டுக்கல் லியோனி அவர்கள்தம் கவனத்திற்கு இணைக்கிறேன்.

சினிமா ரசனை கல்வியின் மூலம் ஒரு தலைமுறை பயன் பெறுமேயானால் திரைக்கலைஞர்களுக்கு காவடி தூக்கும் பக்தர்களாக, கட்-அவுட்களுக்கு பாலபிசேகம் செய்யும் பைத்தியம் தெளிந்து விசிலடிச்சான் குஞ்சுகள் எனும் போக்கு மாறி இளைய சமுதாயம் விமர்சன பூர்வமாக நிதர்னமான சினிமாவை ரசிக்கும் இனமாக மாறும்.” என்று கூறியுள்ளார்.