கொல்கத்தா:
மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் போராட்டத்தின்போது ஏற்படும் சேதங்களுக்கு,  போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வழி வகை செய்கிறது.

விலைவாசி உயர்வு கட்டு படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும்   போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 22 கோடி பேர்கள் பங்கேற்கும் இந்த போராட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களையும் முழு முனைப்புடன் அமலாக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே, பாதுகாப்பு போன்ற முக்கியமான பொதுத்துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் இந்த பொது வேலை நிறுத்தத்துக்கு அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய தொழிற்சங்கங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த போராட்டம் குறித்து மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘போராட்டங்களினால் சேதமடையும் பொருட்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய சட்டத்தினை அமல்படுத்திட மேற்கு வங்காள அரசு திட்டமிட்டு வருகிறது.  மேற்கு வங்காளத்தில் நடைபெறும் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது. போராட்டம் நடத்துவதால் நடத்துபவர்களுக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை’’ என்றார்.
இந்நிலையில் போராட்டங்களில் சேதமடையும் பொருட்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய சட்டத்தினை மாநிலத்தில் அமல்படுத்திட மேற்கு வங்காள அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.