சென்னை,

சென்னையின் மையப்பகுதியான கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இயக்குனர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் கவுதமன் கைது செய்யப்பட்டார். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

கத்திப்பரா ஜங்ஷனின்  நான்கு பக்கமும் சாலையை இரும்பு சங்கிலியில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கத்திப்பாரா ஜங்ஷனில் இந்த போராட்டம் நடைபெற்றதால் விமான நிலையம் செல்பவர்களும், வெளி மாவட்டம் செல்லும் வாகனங்கள், சென்னைக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் போக வழியில்லாமல் ஸ்தம்பித்து நின்றன.

இதன் காரணமாக கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும்,  மத்திய அரசை கண்டித்தும்  சென்னை கிண்டியில் இயக்குநர் கவுதமன் தலைமையில் இந்த  திடீர் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.

போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் இயக்குனர் கவுதமனை கைது செய்தனர். மற்றவர்களையும் அப்புறப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது.