சென்னை:

லைஞர் இல்லாத நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என்றும், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று திமுக தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ஏழை எளிய மக்களக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிப்பதே நமது குறிக்கோள் என்றும் கூறி உள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாம் போற்றி வரும் நல்லுறவின் தொடர்ச்சியாக, தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு நடைபெற்ற ஊடகத்தின ருடனான சந்திப்பின் போது, “உங்கள் பிறந்த நாளில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகுமா?” என கேட்டார்கள்.

அப்போதே, “என் பிறந்த நாளைக் கொண்டாடும் மன உணர்வில் நான் இல்லை” என்பதைத் தெரிவித்தேன்.

மார்ச் 1-ந்தேதி என்னுடைய பிறந்தநாள் என்ற போதும், நம்மை ஆளாக்கி நெறிப்படுத்தி பொது வாழ்வுப் பணியில் நல்வழிப்படுத்திய தலைவர் கலைஞர் நம்முடன் இல்லாத நிலையில், பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே இப்போது என் எண்ணம்.

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் முதல் நிகழ்வாக, தலைவரும் தந்தையுமான கலைஞரிடமும், அன்னையார் தயாளு அம்மையாரிடமும் தாள் வணங்கி வாழ்த்துப் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தலைவர் கலைஞரின் வாழ்த்துகளை நேரில் பெற முடியாதபடி, இயற்கையின் சதி அமைந்துவிட்ட நிலையில், பிறந்த நாள் நிகழ்வுகள் அவசியமற்றவை என்பதே என் முடிவு.

வழக்கமாக மார்ச் 1 அன்று நேரில் சந்தித்து வாழ்த்தும் கழகத்தின் மாநில -மாவட்ட –  ஒன்றிய – பேரூர் – சிற்றூர் – துணை அமைப்புகளின் நிர்வாகிகள், இந்த முறை அதனைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிறந்த நாள் விழா எனும் பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதை கைவிட்டு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்ற வரை வழங்கிட வேண்டுகிறேன்.

தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள வலிமையான கூட்டணி, எதிர்வரும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி யில் உள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் வகையில், மாற்றாரும் மலைத்திடும் வண்ணம், இப்போதிருந்தே கண்ணயராமல் களப்பணியாற்றுவதே கழக உடன்பிறப்புகள் எனக்கு பிறந்தநாளில் உவந்து அளித்திடும் உயர்வான பரிசாகும்.

உன்னதமான அந்த உழைப்பு தரப்போகும் “நாற்பதுக்கு நாற்பது” என்ற வெற்றிக்கனியை, என்றும் நம் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞரின் உயிர்த்துடிப்பான நினைவுகளுக்கு பணிவோடு காணிக்கையாக்கு வோம்!.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.