சென்னை: யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும்எ ன  இலங்கை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையம், கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம்,  சர்வதேச விமான நிலையம் என மறுபெயரிடப்பட்டது. ஆனால், அங்குள்ள ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை மற்றும் இந்திய அரசுகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா, கொரோனா தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக முடங்கிய விமான சேவை மீண்டும் தொடங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.  இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. இது, கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த  2020 ஆம் ஆண்டில் இருந்து விமான சேவைகளும் முடங்கியதால், இலங்கையின்  சுற்றுலாத் துறையை கடுமையாக முடக்கியது. இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணமாக அமைந்தது.

இதையடுத்து மீண்டும் சுற்றுலாவை புதுப்பிக்க விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி,  யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. அநேகமாக டிசம்பர் 12ம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப்படும் என கூறியவர், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம் இயக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும், இதை மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறியவர், 2019ல் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தது. 2019 நவம்பரில் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது மீண்டும் தொடங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.