சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள், சிலைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் மென்பொருளின் ஒளி வருடல் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் முறைகேடுகள் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். தற்போது ஆவணங்கள் பாதுகாக்கப்படும் என கூறி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆணையர் அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் ஒளிவருடல் செய்யப்பட்டு மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

திருக்கோயில்களில் உள்ள சட்டப் பிரிவு 29 பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பழைமையாகி பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதால், உடனடியாக அத்தகையவைகளை ஒளிவருடல் செய்து மென்பொருளில் சேமிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அது தொடர்பாக விவரங்களை உடன் சேகரித்து பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இதனை கணக்கெடுத்து மண்டல இணை ஆணையர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே ஒளிவருடல் செய்து மென்பொருளில் சேகரிக்கப்பட்ட தரவுகள் உடனடியாக, அந்தந்த திருக்கோயில் தலைப்பின் கீழ் பொதுமக்கள் பார்வைக்கும். இத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கும் வலைதளத்தில் ஏற்ற வேண்டும்.

தற்போது ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தனியே ITMS எண் வழங்கப்பட்டு, அந்த எண்ணின் கீழ் ஒளிவருடல் செய்யப்பட்ட அந்த திருக்கோயில் ஆவணங்கள் அந்த திருக்கோயிலுக்கு பயன்பெரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

இதற்காக சட்டப்பிரிவு 46(ii), 46(ii) மற்றும் 46(I) திருக்கோயில்களில் ஒளிவருடல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு எதுவாக திருக்கோயில்களில் உள்ள சட்டப்பிரிவு 29 உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் எண்ணிக்கை அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கை விவரங்களை அறிக்கையாக அனுப்பி வைக்க மண்டலஇணை ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.