சென்னை: பாலியல் வழக்கு காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான  வழக்கில் 6 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு ராஜேஸ்தாசுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, 4 வாரத்தில் விசாரண முடிக்கப்படும் என காவல்துறை கூறியது.

இன்றைய விசாரணையின்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு , வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு காரணமாகத் தடயவியல் அறிக்கையைப் பெற முடியவில்லை எனவும் கூறினார்.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு, தனது அறிக்கையை ஏற்கெனவே உள்துறைச் செயலாளரிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கின் புலன் விசாரணையை முடித்து, ஆறு வாரங்களில்  இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.