சென்னை: சென்னையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக கூறி, ஒரே நேரத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடை  மற்றும் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி,  அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பருவமழை முடிவடைந்த பின்னர்தான் புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் தரவேண்டும் என்றும், மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி,  பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு  முன்னதாகவே பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக,  புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்களில் மழை நீட் தேங்குவதுடன், தெருக்களும் சேறும் சகதியாக  மாறிவிடுவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சொல்லானா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், பாதிப்புகளை குறைக்கும் வகையில் சில பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறுபாலங்களுக்கு கீழ் படியும் கழிவுகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களுக்கு கீழ் இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களில் பல ஆண்டுகளாக குவிந்துள்ள கழிவு  மேடுகளை அதற்கான இயந்திரங்கள் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இணைப்பு இல்லாத இடங்களில் உரிய இணைப்பை ஏற்படுத்தி மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய பணிகளை மழைக்காலத்துக்குப் பின்னரே ஒப்புதல் அளித்து தொடங்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சென்னையில் தற்போது சென்னை மாநகராட்சியால் 16 சுரங்கப்பாதைகள், இதர துறைகளால் சில சுரங்கப்பாதைகள் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுரங்கப்பாலங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் துறைகளின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கெனவே உள்ள மோட்டார் பம்புகளின் திறனை விட கூடுதலாக 50 சதவீதம் திறன் கொண்ட பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், மழைநீரை பாலங்களில் இருந்து வெளியேற்றினால், அது மீண்டும் பாலத்துக்குள் வராமல் தடுக்க, கால்வாய்களில் திருப்பி விடப்படுகிறது.

தமிழக அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மழை பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.