நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
நமக்கு தெரிந்த விஜயகாந்த் #Hbd
டிப்புத் துறையில் இருந்து அரசியலில் புகுந்து முதலமைச்சர் வரை வந்து வெற்றி பெற்றவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்.. கலைஞரும் ஜெயலலிதாவும் வெற்றி பெறாத போதுகூட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பிடித்தவர்கள்.. வெற்றி காணாத போது கிடைக்கிற இந்த உயர்ந்த அந்தஸ்தை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்த திரைநட்சத்திரம் தமிழக அரசியல் வரலற்றில் விஜயகாந்த் மட்டுமே.
இதற்காக அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதைஅவரின் ஆரம்ப கால வாழ்க்கையை அலசினால் ஒழிய தெரியவராது. தமிழ்சினிமாவில் காலம் காலமாய் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு விஷயம் உண்டு. எவ்வளவு பெரிய ஸ்டாரானாலும் தொடர்ந்து சில படங்கள் வழுக்கினால், அம்போவென கைதட்டிவிட்டு அடுத்த நட்சத்திரத்தின் பக்கம் போய் விடுவார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தொடர் தோல்வியை கொடுத்தாலும் சிலரை மட்டும் விட்டு போகவே மாட்டார்கள்.
காரணம், யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதைப்போல, வெற்றியை கொடுக்காவிட்டாலும் நஷ்டத்தை ஏற்படுத்தமாட்டார் என்ற உண்மையே அது. இப்போது தேமுதிக என்ற கட்சிக்கு அரசியல் தலைவராக இருக்கும் நடிகர் விஜயகாந்த், என்றைக்குமே தயாரிப்பாளர்களை அழவிட்டதில்லை. பி அண்ட் சி ஏரியாக்களில் அவருடைய படங்கள் வசூலை போதிய அளவில் ஈட்டிவிடும்.. எம்ஜிஆரும் சிவாஜியும் இறுதியாய் ஆக்கிரமிருந்த 1970களில், அவர்களுக்கு பிறகு ரஜினி கமல் ராஜ்ஜியம் ஆரம்பமானது. இருவருமே தனித்தனி ராஜ்ஜியங்களை அமைக்கமுடியவில்லை.
1990களுக்கு பிறகே கமலும் ரஜினியும் வசூலில் முதல் இரு இடங்களை தீர்மானிக்க முடிந்தது. காரணம், தமிழ்சினிமாவை பொறுத்தவரை 1980கள் என்பது, ஏராளமான வசூல் சுல்தான்கள் இருந்த கலப்படமான காலகட்டம். ரஜினி கமலை தாண்டி மோகன், கார்த்தி, ராமராஜன் சத்யராஜ், பிரபு போன்றோரும் கொடிகட்டி பறந்த நேரம் அது. இவர்களில் வெள்ளி விழாநாயகன் என பேரே எடுத்தார், படத்துக்கு படம் மைக்கை பிடித்துகொண்டு தலையாட்டிய மோகன்.
அப்படிப்பட்ட சூழலில் பாமர மக்களின் கலைஞனாக அவதாரம் எடுத்து விஸ்வரூபம் காட்டியவர் புரட்சிக்கலைஞர் என்று சினிமா பட்டம் பெற்ற விஜயகாந்த். சிவப்பு தோல்தான் அழகு என்று தீர்மானிக்கப்பட்ட தமிழ் சினிமாவில், கன்னங்கரேல் தோற்றதுடன் நட்சத்திர கனவோடு மதுரையில் இருந்து சென்னை வந்த போது அவருக்கிருந்த தன்னம்பிக்கையை நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும். இவனெல்லாம் நடிக்க வந்துட்டான் என்று எத்தனையோ பேர் அவமானப்படுத்தி கிண்டல் செய்தாலும் அதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் திரையில் தன்னை மட்டும் நம்பி முன்னேறிய வர்க ளில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதற்கப்புறம் விஜயகாந்த்தான்.
கருப்பான ரஜினிக்காவது, நகரத்து வாடை, வாட்ட சாட்டமான உடல்வாகு போன்ற அம்சங்கள் இருந்தன. ஆனால் விஜயராஜ் என்ற விஜயகாந்த்திற்கோ, தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர எல்லாமே பின்னடைவுகள் தான்- 1979-ல் இனிக்கும் இளமை படத்தில் பெண்ணை அலங்கோலமாய் படமெடுத்து பிளாக்மெயில் செய்யும் சோட்டா வில்லனாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக மாறி, 80களில் அவர் தொடர்ந்து வெற்றிக்கொடி யை நாட்டியபோது வியக்காத ஆட்களே கிடையாது..
பெரிதும் பிரபலம் ஆகாத தூரத்து இடிமுழக்கம் படத்தில், ‘’உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’’ என்ற பாடல் விவிதபாரதியில் அவ்வளவு தெறி ஹிட்.. ரெக்கார்ட் பிளேயர்களிலும் தூள் கிளப்பும். ஆனால் படத்தில் கன்னங்கரேல் விஜயகாந்த் அந்த பாடலுக்கு தோன்றி யபோது ஒரு தரப்பு வியந்தது, இன்னொரு தரப்போ பெர்சனாலிட்டியை வைத்து கிண்டலடித்தது. ஆனால் விஜயகாந்த் என்ற கருப்பு மனிதன் எதற்கும் கலங்கவில்லை. காலம், அந்த வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பனை கைவிடவில்லை.
அட்ட கருப்பு என்று சொல்லியே கருப்பு விஜயகாந்துடன் நடிக்க அப்போது மறுத்த முன்னணி நடிகைகள் பலர் உண்டு. விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் அவரை காப்பாற்றியது எதுவென்றால் சில பாடல்களைச் சொல்லலாம். ஷோபா உடன் நடித்த அகல்விளக்கு என்றொரு படம். அதில் இடம் பெற்ற “ஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே” பாட்டு.. பட்டிதொட்டியெங்கும் படு ஹிட். அதேபோல சட்டம் ஒரு இருட்டறை படத்தின், “தனிமையிலே ஒரு ராகம்” பாட்டு, ஆட்டோ ராஜா படத்தில் நடிகை ரஜினி சர்மாவுடன் பாடும் ‘சங்கத்தில் பாடாத கவிதை.. ‘
சிவப்பு மல்லி படத்தின் படத்தின் எரிமலை எப்படி வெடிக்கும் என்ற பாடலும் இப்படித்தான் விஜயகாந்தை உயிர்பித்து உயிர்ப்பித்து வைத்து வந்தன. நமக்கு தெரிந்த விஜயகாந்தின் முதல் மெகா ஹிட் திரைப்படம் என்றால் அது 1981-ல் வந்த சட்டம் ஒரு இருட்டறை. பெற்றோரை பக்கா பிளானோடு கொலை செய்தவர்களை, பதிலுக்கு பக்கா பிளான்களை தீட்டி ஒவ்வொருத்தராய் போட்டுத்தள்ளுகிற விறுவிறுப் பான படம். அட்டகாசமாய் செய்து முடித்தார் விஜய காந்த். ஹீரோ திரையில் வரும்போதெல்லாம் தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கிற ரகமான படம் அது. அந்தப்படம் எந்த அளவுக்கு ஹிட் என்றால் அமிதாப், ஹேமாமாலினி ரஜினி போன்ற டாப் ஸ்டார்களை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்கிற அளவுக்கு ஹிட்டோ ஹிட்..
அதன்பிறகு சாட்சி போன்ற படங்களால் அடித்தட்டு மக்களை ஆக்சன் காட்சிகள் மூலம் தன் வசப்படுத்திய விஜயகாந்த், கடுமையாக போராடி முன்னணி நடிகர்களுக்கு இணையாக 80-களின் மத்தியில் மாஸ் கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்த்தை பிடித்தவர். நடிக்க வந்த சில ஆண்டுகளில் கிராமப்புறத்து கதாநாயகராக நடித்து வெற்றிகளை குவித்தவர் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோவில் கிழக்காலே போன்ற படங்கள் எல்லாம் இந்த ரகமே. ஆனால் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து போலீஸ் அதிகாரியாக அவதாரமெடுத்த ஊமை விழிகள் படம் விஜயகாந்த்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.
அதன் பிறகு காவல்துறை அதிகாரி வேடம், புலனாய்வு, பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவது என மாற்றம் கண்டு போனது. புலன்விசாரணை, ஆனஸ்ட்ராஜ், சேதுபதி ஐபிஎஸ் மாநகர காவல்.. என அது ஒரு பெரிய பட்டியல். படம் வெற்றியோ தோல்வியோ ஆரம்பம் முதலே எந்த காலத்திலும் விஜயகாந்த் துவண்டு போனதே இல்லை.
சாமான்யனாய் நடித்து வெற்றிகரமாய் ஜொலித்த னால்தான் முன்னணி கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்களை வெளிவரச்செய்து சாதனை படைக்கும் அளவுக்கு இருந்தது அவரது திரைப்பயண வேகம். வைதேகி காத்திருந்தாள், அம்மன்கோவில் கிழக்காலே, கேப்டன் பிரபாகன், வானத்தைபோல போன்ற படங்களின் பிரமாண்டமான வெற்றியின் முன், இன்றைய காலத்தில் வர்த்தகத்திற்காக கட்டமைப்பட்ட விளம்பர பின்னணி கொண்ட வெற்றிகள் நெருங்க முடியுமா என்பது சந்தேகமே.
சினிமா உலகில், மற்ற இரண்டாம் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டியவர். அற்புதமான திறமைகள் இருந்தும் கைகொடுத்து ஆதரிக்க ஆள் இல்லாமல் தத்த ளித்த நவீன சிந்தனைகொண்ட இளைஞர்களுக்கு, ஊமைவிழிகள் படத்தின் மூலம் பெருங்கதவை திறந்துவிட்ட நல்ல மனதுக்காரர். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்பு வழங்கப் பட்டு பின்னாளில் புகழின் உச்சியை எட்டிய நடிகர், நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மிகப்பெரியது.
சட்டம் ஒரு இருட்டறை சாட்சி போன்ற படங்கள் மூலம் விஜயகாந்தே வெற்றிகரமான நாயகனாய் முன்னிறுத்தியவர் டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகர். அவரின் மகன் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமாகி அந்தப் படம் சரியாகப் போகவில்லை. தன் மகனை சினிமா உலகில் அழுத்தமாய் நிலைநிறுத்த ஒரு பக்கபலம் தேவை என்பதை உணர்ந்த எஸ்ஏ சந்திரசேகர் போன் மூலம் தொடர்பு கொண்டு விஜயகாந்திடம் உதவி கேட்டார். வீட்டிற்கு வந்து நேரில் பேசலாமா என்று கேட்டார். ஆனால் விஜயகாந்தோ இயக்குனர் சந்திரசேகரின் வீட்டிற்கே சென்று பேசி முடித்து செந்தூரப்பாண்டி என்ற படத்தை விஜய்க்காக செய்து கொடுத்தார். இதை நன்றிப் பெருக்கோடு விஜயின் தந்தை சந்திரசேகர் பல இடங்களில் சொல்லிக் கேட்டிருக்கிறார்.
இன்னோரு ஆச்சர்யமான விஷயம், பல முன்னணி நடிகைகள் முதன் முதலாய் சொந்தப்படம் எடுக்கும்போது நாடியது விஜயகாந்தைதான். வடநாட்டிலிருந்து நீண்டநாளைக்கு பிறகு திடீரென தமிழ் சினிமாமீது நடிகை ஜெயப்பிரதா கண் வைத்தபோது, ரஜினியையோ கமலையோ கேட்கவில்லை. தமிழக அரசியல் களத்தை சுற்றிப் பின்னப்பட்ட ஏழை ஜாதி படத்திற்காக விஜயகாந்தைத்தான் தேர்ந்தெடுத்தார். பெரும் பரபரப்புடன் ஓடி அந்த படம் வசூலை வாரி குவித்தது. நினைத்தபடியே ஜெயப்பிரதா வெற்றியும் கண்டார்.
ஒரு முன்னணி நடிகரின் ரசிகர்கள் அவரை தாறுமாறாக கொண்டாடினாலும் அவர்களே விருப்பப்பட்டு திரும்பத்திரும்ப பார்க்கிற படங்களாக ஒருசில படங்கள் மட்டுமே அமையும். விஜய்க்கு கில்லி அஜித்துக்கு தீனா விக்ரமுக்கு சாமி சூர்யாவுக்கு சிங்கம் என்பதுபோல் விஜயகாந்துக்கு ரமணா படம்.. படம் முழுக்க ஆக்சனை காட்டுவதை தவிர்த்துவிட்டு அற்புதமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்குள் அவ்வளவு கச்சிதமாக பொருந்திப் போனார் விஜயகாந்த்.
சினிமாவைத் தவிர்த்து சமூகத்தொண்டு அரசியல் ஆகிய இரண்டிலும் விஜயகாந்த் முடிந்தவரை சாதனை படைத்தார் என்று சொல்லலாம் 1950- களில மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் போன்றோர் முயற்சியால் முயற்சியால் தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் ஓரளவு நன்றாக செயல்பட்டு வந்தாலும் காலப்போக்கில் தள்ளாட்டம் கண்டது.
1980 களுக்கு மேல் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் போய் சிக்கிக் கொண்டது. சங்கத்திற்கு பொறுப்பேற்ற எத்தனையோ நிர்வாகிகள் எவ்வளவோ முயன்றும் கடனை அடக்கவே முடியவில்லை. ஆண்டாண்டு காலமாய் கடனில் தத்தளித்த தென்னிந்தியநடிகர் சங்கத்தை அதனிலிருந்து மீட்டது விஜயகாந்த் என்ற சாதனை மனிதன் மட்டுமே. திரை உலகில் எடுத்த செயலை சோர்வே இல்லாமல் செய்து முடிக்கும் விஜயகாந்தின் செயல் திறனுக்கு என்றைக்கும் ஒரு அழிக்கமுடியாத சாட்சி.
மற்றவர்களின் பசியாற்றுவதில் அவருக்கிருந்த தாயுள்ளத்தை 80′ களிலேயே அவரை கூர்ந்து கவனித்தவர் களுக்கு நன்கு தெரியும்.
கல்விக்காக ஏங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோருக்கு உதவுவதற்காக 35 ஆண்டுகளுக்கு முன்பே அவர் நீட்டிய கரங்கள், வியக்கத்தக்கவை. அப்போதெல்லாம் அவர் அரசியலுக்கு வரவில்லை என்பது நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்று அரசியல் கட்சியை ஆரம்பித்து தோற்றுப்போன ஏராளமான தமிழக நட்சத்திரங்கள் மத்தியில், எம்ஜிஆருக்கு பிறகு கட்சிக் கொடியை தனது படங்களில் காட்டி வெற்றிகண்ட ஒரே நட்சத்திரமும் விஜயகாந்த் தான்.
ஒரு கட்சியை தொடங்கி, கலைஞர், ஜெயலலிதா அவர்கள் என்ற இருபெரும் ஆளுமைகளுக்கு இடையே நடை போட்ட விதம் அலாதியானது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முக்கிய பொறுப்புவரை விஜயகாந்த் எட்டிய வேகம்,தமிழக அரசியலில் ஒரு விறுப்பான வரலாறு. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். தமிழகத்தில் பாஜக தோல்வி, ஆனால் மத்தியில் வெற்றி. மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். அப்போது விஜயகாந்த டெல்லிக்கு போய் மோடியை பார்க்கிறார். மோடி ஓடிவந்து விஜயகாந்தை வாஞ்சையோடு கட்டிப்பிடிப்பார் பாருங்கள்.
வெற்றியோ தோல்வியோ தன்னை நம்பினால் விஜயகாந்த் எப்படி உழைப்பார் என்பதை மோடி புரிந்துகொண்டு நன்றி செலுத்தியவிதம் இன்றளவும் மறக்க முடியாதது..
கம்பீர குரல் வளத்தால் சினிமாவிலும் அரசியல் மேடைகளிலும் வலம் வந்த அவருக்கு காலம் செய்த கோலம் உடல் நலம் விஷயத்தில் வேறுமாதிரியாக விளையாடி விட்டது..
விரைவில்.பூரண நலம் பெற்று பழைய பன்னீர் செல்வமாய்.. விஜயகாந்தாய் வரவேண்டும்..
அபரிதமான அன்பு கொண்டவர்களால் கேப்டன் என்றழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 70-வது பிறந்த நாள்

வாழ்த்துக்கள்.