சென்னை,

டந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், இன்றைய பேச்சின்போது ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

முதல்கட்டமாக  கடந்த 15ந்தேதி முதல் கோடம்பாக்கத்தில் உள்ள  தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார்.

இன்று கடைசிநாள் கூட்டத்தில் அவர் பேசும்போது  ஸ்டாலின்,  அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் கூறியிருந்தார்.

சீமான் பற்றி பேசும்போது,  சீமான் கடும் போராளி. அவர் கருத்துகள் கேட்டு நானே பலமுறை பிரமிச்சுப் போயிருக்கேன் என்று அதிரடியாக கூறினார்.

ரஜினியின் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, சீமான் கூறியதாவது,

ரஜினிகாந்த் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது..மண்ணின் மைந்தர்களுக்கு ஆளும் உரிமை உள்ளது. ரஜினி தலைமை ஏற்று சேவை செய்யட்டும். ஆனால் முதல்வராகி, தலைமையேற்று தமிழ்மக்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் விட்டு விடலாம். அரசியலில் அளப்பரிய தியாகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

 

ரஜினியின் இன்றைய பேச்சு  தமிழக அரசியல் கட்சியினரிடையே வரவேற்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.