சென்னை:  பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர் உள்பட தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும்  இன்று ஆலோசனை. மேற்கொண்டார். அப்போது இரண்டாவது தர்மயுத்தம்  தொடங்கி உள்ளதாகவும்,  இபிஎஸ் பெயரை உச்சரிக்க விரும்பவில்லை என்றும், அதிமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.

ஒற்றை தலைமை காரணமாக அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், தற்போதைய அதிமுக தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நீதிமன்ற உத்தரவுபடி, எடப்பாடி தரப்பே பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால், அவர் அறிவித்த வேட்பாளர் தென்னரசே அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக எடப்பாடி ஆதரவாளர்களே வாக்குவேட்டையாடி வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி தரப்பு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நிர்வாகிகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை என பல கட்டுப்பாடுகளுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொடங்கிய காலம் முதல் தற்போது உள்ள நிலை வரை கடந்த வந்த பாதைகளை விவரித்தார்.  திராவிடர் காலமாக இருந்து, அதன் அதன் பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் பரிணாம வளர்ச்சி கண்டு உள்ளது அதிமுக. அதன் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகள் கொண்டு வரப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியவர்,.

தேர்தல் ஆணையத்திலும் இந்த ஆவணங்கள்தான் உள்ளன. அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இல்லை என்றே கட்சியின் அடிப்படை விதிகளை எம்.ஜி.ஆர். வகுத்தார். எந்த அளவுக்கு அதிமுகவின் சட்டவிதிகளை சிதைக்க முடியுமோ, அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகளை சிதைத்தனர்.

தற்போதுள்ள  கட்சி தலைமை பெயரை கூட வாசிக்க மாட்டேன். அதற்கு கூட அவர்கள் தகுதியில்லாதவர்கள். அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார் என எடப்பாடியை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ், தொண்டர்களால் வழங்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி 2026வரையில் இருக்கிறது. அதிமுக வேட்புமனு வில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தான் கையெழுத்திட வேண்டும் என குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது என பேசிய ஓபிஎஸ்,  “சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்றார்.

மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்றும் , மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர்,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக  மார்ச் மாதம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள்  ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ, மனோஜ் பாண்டியன் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கட்சி யார் பக்கம் என தெரிந்துவிடும், மாபெரும் கூட்டத்தை கூட்டி, யாருக்கு பலம் உள்ளது என்பதை நிரூபிப்போம் என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது