லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

தொற்று பரவலாக அதிகரித்துக் கொண்டே வந்ததால் கல்வி நிலையங்கள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வந்தது. இந் நிலையில் வரும் 10ம் தேதி முதல் மாநிலத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 1ம் தேதி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முன்னதாக கடந்த மாதம் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.