பல வருடங்களுக்கு முன், காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது நடிகர்கள் ஒரு போராட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்ட சத்யராஜ், தனது பாணியில் தடாலடியாக பேசினார்.

தற்போது அது குறித்து பேசும் கன்னட வெறியர்கள், சத்யராஜ் நடித்த  பாகுபலி 2 படத்தை கர்நாடகத்தில் வெளியிட முடியாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் பேசியது குறித்து கன்னடர்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக சத்யராஜ் தெரிவித்தார்.

இதை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சூழ்நிலை உணர்ந்து வருத்தம் தெரிவித்த சத்யராஜை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், சத்யராஜை “பெரியமனுசன்” என்றும் கமல் தெரிவித்திருக்கிறார்.

கமல் நடித்த விருமாண்டி படத்தில், “மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுசன்” என்று வரும் வசனம் மிகவும் புகழ் பெற்றது.

ஆக, சத்யராஜ் கவுரவமாக வருத்தம் மட்டும் தெரிவித்துள்ளார் என்று சிலர் சொல்லிவரும் நிலையில், “அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்” என்று கமல் மறைமுகமாக கிண்டலடிக்கிறாரோ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

ஆனால் இதை உணர்ந்தோ உணராமலோ, கமலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சத்யராஜ்!