சென்னை:  அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட  எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கு தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில், பதிவுத்துறையில் சரிபார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில்,  கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுடிவில்,  கடந்த 2018-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2020 மார்ச் முதல் 2021 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாததால், 2021 அக்டோபருக்கு பின் 90 நாட்கள் அவகாசம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. எனவே, குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக்கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு.

அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தன்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை. தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இந்த மேல் முறையீட்டு மனு 25 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்துள்ளதால், தாமதத்தை ஏற்று, வழக்கை விசாரணைக்கு பட்டியலிடவும் மேல் முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, 25 நாட்கள் தாமதத்தை ஏற்று, வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.