பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவரது உறவினர்கள் சந்தித்து பேசி வருவதில், தொடர்ந்து சிறை விதிமுறைகள் மீறப்படுவது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி பணம் பெற்றுக்கொண்டு சிறைத்துறையினர்  சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறையில் அவருக்கு ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டதாகவும், அவ்வப்போது சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாகவும், அதற்கு ஆதாரமாக   சசிகலா, இளவரசி ஆகியோர் வெளியே ‘ஷாப்பிங்’ சென்றுவிட்டு சிறைக்கு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகளை அப்போது டிஐஜி ரூபா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து  உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அந்த விசாரணை குழுவும் சிறை விதி மீறி சசிகலா சொகுசாக வாழ்ந்து வந்ததை உறுதிபடுத்தியது.

அதையடுத்து சிறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, சசிகலா சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், சசிகலா சிறையில் மீண்டும் சொகுசாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிறை விதிகளை மீறி அவரது உறவினர்கள் அவரை சிறையில் அடிக்கடி சந்தித்து வருவதாகவும், தகவல் உரிமை சட்டப்படி (ஆர்டிஐ) கேட்கப்பட்ட கேள்வியில் தெரியவந்துள்ளது.

சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி இந்த தகவலை பெற்று வெளியிட்டுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் அரசு சசிகலாவுக்கு மறைமுகமாக உதவி செய்துவருவதாக கூறப்பட்ட நிலையில், கர்நாடக அமைச்சர் ஒருவரும் சிறைக்கே சென்று சசிகலாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.