சென்னை,

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அதேநேரத்தில், சசி அணியை  சேர்ந்த வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சரத்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

தினகரனுக்கு ஆதரவு அளிக்க பணம் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.

அங்கு கிடைத்த ஆவனங்களின் அடிப்படையில், அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அதன் காரணமாக நேற்று முன்தினம் அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அதைத்தொடர்ந்து நேற்று அவரது மனைவி நிறுவனமான ரேடான் மீடியோ நிறுவனத்தில் அதிரடி சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நேற்று மாலை மீண்டும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், சரத்குமார், ராதிகா இருவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்பேரில் இன்று பிற்பகல் அவர்கள் இருவரும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகிறார்கள்.