டெல்லி: கோகுல்ராஜ் கொலை வழக்கு சாட்சியான, சுவாதியின் மேல்முறையீட்டு  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆணவ கொலைகளிலும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கோகுல்ராஜ் கொலை வழக்கும் ஒன்று. இந்த வழக்கில், கோகுல்ராஜனை காதலித்த சுவாதி என்ற இளம்பெண், பின்னர் பிறழ் சாட்சியாக மாறினார். இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு,  மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.  இந்த வழக்கில் கோகுல்ராஜை ஆணவ கொலை செய்ததாக, , தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 10 பேரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு கோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்த்து வருகிறது. இந்த வழக்கில், பிறழ் சாட்சியான சுவாதி மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தது. இதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் சுவாதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் .