அயோத்தியில் 2024 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி ராமர் கோயில் திறப்பதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ ராமர் மற்றும் ஜானகி சிலை செய்வதற்காக நேபாளத்தில் இருந்து சாளக்கிராம கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் இமயமலையில் தாமோதர் குந்த்-தில் உள்ள காளி கண்டகி ஆற்றில் இருந்து பீகார் வழியாக பிப்.2 ம் தேதி அயோத்தி வந்தடைந்த இந்த சாளக்கிராம கற்பாறையை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வந்தடைவதற்கு முன்பு பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இந்த பாறையைப் பார்க்க வட இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான ராம பக்தர்கள் திரண்டதோடு ராம கோஷமும் விண்ணை பிளந்தது.

கண்ணனின் நிறம் கொண்ட இந்த சாளக்கிராம கல்லை 100 க்கும் மேற்பட்ட விஸ்வ இந்து பரிட்சத் மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் நேபாளத்தில் இருந்து அந்நாட்டு அரசு அனுமதியுடன் இந்தியா கொண்டுவந்துள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 8000 அடி உயரத்தில் இமயமலையில் உள்ள அன்னபூர்ணா, தவுளகிரி மலையுச்சியில் இருந்து உருவாகும் இந்த காளி கண்டகி அல்லது நாராயணீ ஆறு இந்தியாவில் கண்டகி ஆறு என்று அழைக்கப்படுகிறது. இதன் துணை ஆறு பீகார் மாநிலத்தின் சோன்பூரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

 

இங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த சாளக்கிராம கற்களில் இருந்து ராமர் மற்றும் ஜானகி சிலைகள் வடிக்கப்பட்ட உள்ளது. இந்த சிலைகள் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கர்பகிரத்திற்குள் வைக்கப்பட இருக்கிறது.

‘நேபாள இமயமலையில் சாளிக்ராம யாத்திரை’ என்ற பெயரில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஹோலி வால்டர்ஸ் எழுதிய புத்தகத்தில் ஷாலிகிராம் கற்கள் அம்மோனைட்டின் புதைபடிவங்கள் என்று குறிப்பிட்டுள்ளார், இது 400 மில்லியன் முதல் 65 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை மொல்லஸ்க் (mollusc) என்ற நீர் வாழ் உயிரினத்தால் உருவானது என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலும் நேபாளத்தில் உள்ள கந்தகி ஆற்றின் துணை நதியான காளி கண்டகியின் நதிப் படுகைகளில் அல்லது கரையோரங்களில் இந்தக் கற்கள் காணப்படுகின்றன.

இந்தக் கல்லை, விஷ்ணுவின் அம்சமாக அங்குள்ள இந்துக்கள் போற்றிவருகிறார்கள்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான நெருப்பில் இருந்து உருவான ஜலந்தர் என்ற அசுரன் பிரம்மனை நோக்கி தவம் செய்து பல வரங்களைப் பெற்றிருந்தான்.

விஷ்ணு பக்தையான வ்ரிந்தா என்ற பெண்ணை மணந்த பின் மற்ற அரசர்களுக்கு அவன் மீதிருந்த பயம் குறையத்தொடங்கியதை அடுத்து, அதற்கு தனது மனைவியின் கற்பை சந்தேகித்த ஜலந்தர், மூர்க்கனாக மாறியதோடு மற்ற மன்னர்களுடன் மல்லுக்கட்டி தனது வரத்தின் பயனால் அனைவரையும் சித்திரவதைக்கு உள்ளாக்கினான்.

ஜலந்தரின் அட்டகாசம் எல்லை மீறியதையடுத்து அவனுடன் போர் புரிந்தார் சிவன். சிவனுக்கு நிகராக நின்று சண்டையிட்ட ஜலந்தர் ஒரு கட்டத்தில் சிவன் வேடம் கொண்டு பார்வதியை கவர நினைத்த போது அவனை சிலையாகச் செய்தார் பார்வதி.

பின்னர் விஷ்னுவிடம் முறையிட்ட பார்வதி இதற்கு வ்ரிந்தா கற்பு நெறி தவறாதவள் என்பதை ஜலந்தர் புரிந்துகொள்ளும்படி செய்யவேண்டும் என்று முறையிட்டார்.

பார்வதியின் கோரிக்கையை ஏற்று ஜலந்தர் உருவத்தில் வர்ஷினி முன் சென்ற விஷ்ணுவை தனது கணவன் என நினைத்து ஓடிவந்து ஆரத்தழுவ அது தனது கணவனில்லை என்று உணர்ந்த வ்ரிந்தா, விஷ்ணுவை கல்லாகப்போக சாபமிடுகிறாள். தனது மனைவியின் கற்புநெறியை உணர்ந்த ஜலந்தரும் மணம் திருந்துகிறான்.

இப்படி கல்லாகப் போக சாபம்பெற்ற விஷ்ணு இமயமலையில் ஓடும் நதிகளுக்கு நடுவே கண்ணனின் நிறத்தில் நீலவண்ண கற்படிவமாக இருக்கிறார் என்பது ஐதீகம் என்று புராணக் கதைக் களஞ்சியமான ஸ்பீக்கிங் ட்ரீ-யை மேற்கோள்காட்டி பர்ஸ்ட் போஸ்ட் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

நேபாள மக்களால் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படும் இந்த சாளக்கிராம கல்லில் உருவாக்கப்படும் ராமர் சிலை மூலம், ரூ. 1800 கோடி மதிப்பில் உருவாகி வரும் ராமர் கோயில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் விமோசனம் பெற உள்ளது.