சென்னை: தமிழ்நாட்டில் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைத்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கண்டறிய ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்த ஆரம்பக்கட்ட காலங்களில் இதற்கான சோதனை கட்டணம் பல ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், சாமானிய மக்கள் பரிசோதனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து, மாநில அரசு, கொரோனா சோதனை கட்டணத்தை வெகுவாக  குறைத்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு, தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம்  ரூ.3000-ஆக இருந்த கொரோனா பரிசோதனை கட்டணம், தற்போது ரூ.1200ஆக குறைத்து உத்தரவிட்டது. மேலும், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மையங்களில் ரூ.800க்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்தது. பின்னர் அது மேலும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, தமிழகஅரசு, முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கும் RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைத்துள்ளது. மேலும், குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை உறுதி செய்யும் RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.