சென்னை:  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாளில் சாலையில் திரிந்த  சுமார் 430 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன்படி  உரிமையாளர்களுக்குத் தலா ரூ.1,550/- வீதம் ரூ.8.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும் மாடுகளை அவிழ்த்து விடாமல் பாதுகாக்கும்படி மாடுகளின் உரிமை யாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550/- விதிக்கப்படுகிறது. அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டுத்தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச்செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாணப்பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தைப்பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 10 நபர்கள் நியமித்து காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வரை மொத்தம் 242 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- வீதம் ரூ.3,75,100/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மக்களை மீறி மாடுகளை பொதுவெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச்சட்டம் 1960 பிரிவு 11 (1) உட்பிரிவு (h) (i) & (j)-ன் படி அபராதம் விதிக்கப்பட்டு, காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருந்தாலும் சாலைகளில் மாடுகள் அலைந்து திரிவது தொடர்ந்து வருகிறது. இதுபோன்று திரியும் மாடுகளை மாநகராட்சி அலுவலர்கள் பிடித்துச்செல்கின்றனர். அதன்படி கடந்த 15 நாளில் மட்டும் சுமார் 430 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.8.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஒரே மாடு 3முறை பிடிபட்டால், அந்த மாடு உரிமையாளர்களிடம் திரும்பி ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.