டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில்,  தொற்று பரவல் அதிகம் உள்ள தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், உருமாறிய வகையில் பரவி வருகிறது. சமீப காலமாக நாடு முழுவதும் இன்புளுயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அத்துடன் ஒமிக்ரான் கொரோனா திரிபும் பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 5026 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,   இந்தியாவில் கடந்த மார்ச் 8-ந்தேதி வரை 2,082 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, மார்ச் 15-ந்தேதியன்று 3,264 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசு மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பின்பற்ற வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.