மும்பை:

ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படிப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். இந்த படத்தை கபாலி படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கபாலி வெற்றியை தொடர்ந்து மீண்டும் இருவரும் இந் படத்தில் இணைகிறார்கள்.

இது, ரஜினியின் 164-வது படமாகும். தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இன்று மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக ரஜினி நேற்று சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். இந்தி நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘காலா’ படம் மும்பை பின்னணியில் அதிரடி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மும்பையில் பிரபல தாதாவாக விளங்கிய ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படம் தயாராகவுள்ளது. ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ”காலா” படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. அதில் ரஜினிக்கு பா.ரஞ்சித் காட்சிகளை விளக்குவது போன்றும் ரஜினிகாந்த் இடம்பெற்ற காட்சிகளும் வைரலாக பரவி வருகிறது. சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் ரஜினியுடன் நடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவியுள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.