புதுச்சேரி:

‘‘புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி பாஜ ஏஜென்டை போல் செயல்படுகிறார்’’ என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளரும், நடிகையுமான நக்மா தெரிவித்துள்ளார்.


மேலும், அவர் கூறுகையில், ‘‘கவர்னர் பதவி கிரண்பேடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர் அரசியல் பக்கம் வராமல் தனது பணியை மேற்கொள்ள வேண்டும். மீனவர்கள் நிவாரணம், சுற்றுலா வளர்ச்சி போன்றவற்றில் பேடி எடுத்துள்ள நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

ஏழை மாணவர்கள் படிப்பை தொடர உதவி தொகை வழங்க அனுமதிப்பது, ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவது மற்றும் பிற பல்வேறு நலத்திட்டங்களை காங்கிரஸ் அரசு அமல்படுத்துவதற்கான கோப்புகளுக்கு ஏன் பேடி அனுமதி வழங்கவில்லை என எனக்கு புரியவில்லை’’ என்றும் அவர் கூறியுள்ளார்.

‘‘புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மற்றும் புதுச்சேரி அரசால் கொண்டு வரப்படும் நலத்திட்டங்களை அமல்படுத்தும் வகையில் பேடி செயல்பட வேண்டும். மத்தியில் உள்ள அரசானது பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை’’ என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.