புதுச்சேரி:  ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது,  சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, இரவல் கவர்னர் வேண்டாம் என கோஷமிட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

 2023 – 24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் இன்று (மார்ச்09) தொடங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை புரிந்த கவர்னர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

அதையடுத்து தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அங்கு பேரவைத்தலைவர் இருக்கையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை அமர்ந்தார். அவர் அருகே பேரவைத்தலைவர் செல்வம் அமர்ந்தார். பின்னர் பாரதியாரின் பாடல் வரிகளை வாசித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், இந்தியா ஜி20 மாநாட்டுக்கு தலைமையேற்று நாடு முழுவதும் 200 கூட்டங்கள் நடத்த முடிவெடுத்து, அதில் முதல் கூட்டம் புதுச்சேரியில் நடந்தது நமக்கெல்லாம் பெருமை. புதுச்சேரி அரசு, நிதி நிர்வாகத்தை சிறப்பாக கையாண்டதால் ரூ. 1400 கோடி நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.ரூ. 39,019 கோடி நடப்பு விலை மதிப்பிடப்பட்டுள்ளது. இது 4.0 விழுக்காடு அதிகம். மேலும் புதுச்சேரியில் உள்ளவர்களின் தனிநபர் வருமானம் 2021-22ல் ரூ. 2.14 லட்சத்திலிருந்து 22-23 ல் ரூ.2.22 லட்சமாக உயர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில இடுபொருள் தரப்படுகிறது. கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது என தன் உரையில் பேசினார்.

துணைநிலை ஆளுநர் பேரவையில் உரையாற்றியபோது, ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு எழுந்து நின்று கையில் இருந்த போஸ்டரை காண்பித்தார். அதில், மத்தியஅரசே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் நியமித்துடு, வேண்டாம் வேண்டாம் இரவல் ஆளுநர் வேண்டாம் என்று எழுதியிருந்தது.

அதை பார்த்த பேரவைத்தலைவர் செல்வம் நேருவை அமரக்கூறினார். ஆனால் அவர் நெடுநேரம் நின்றிருந்தார். பின்னர் பேரவையிலிருந்து எம்எல்ஏ நேரு வெளிநடப்பு செய்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ நேரு, புதுச்சேரியில் கவர்னராக உள்ள தமிழிசை எப்போது புதுச்சேரி வருகிறார். எப்போது போகிறார் என்று தெரியவில்லை. மக்கள் தேவைப்படும் நேரத்தில் அவரை சந்திக்க முடியவில்லை. கவர்னர் மாளிகையில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்துகிறார். இதுவரை எந்த குறையை அவர் நிவர்த்தி செய்து இருக்கிறார். பஸ் நிலையத்தில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லை, சுற்றுலா மாநிலமாக உள்ள புதுச்சேரியில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தற்போது 13மாநிலங்களுக்கு கவர்னர் நியமிக்கப் பட்டார்கள். ஆனால் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது, இது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

வரும்  13-ம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.