டில்லி:

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் அழைப்பி்ன் பேரில், டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் அவரை சந்தித்தனர். சந்திப்புக்குப் பிறகு, போராட்டம் தொடரும் என்று விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று அய்யாக்கண்ணு அறிவித்தார்.

வங்கிக்கடன்கள் முழுவதையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக முழு நிர்வாண போராட்டத்தை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விவசாயிகளை அழைத்துப் பேசினார். “விவசாயிகளின் போராட்டம் உணர்வு பூர்வமானது. அவர்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும். விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, “பிரதமர் எங்களைச் சந்திக்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்று அறிவித்தார்.