சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தனியார் பேருந்து டெண்டர் காரணமாக போக்குவரத்துதுறையினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், அமைச்சர் சிவசங்கர் இன்று விளக்கம் அளித்தார்.  அப்போது, அரசு மற்றும் தனியார் பேருந்து என்றிருப்பதை இருவரும் இணைந்து செயல்படும் புதிய முயற்சியாகவே அறிவிக்கப்பட்டு உள்ளது அமைச்சர் சிவசங்கர் கூறினார். மேலும் தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவச சலுகை தொடரும் என்றும் கூறினார்.

சென்னையில் தனியார் நகரப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர போக்குவரத்து கழகமே, தனியாரிடமிருந்து பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று இயக்க முடிவு என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 2023 ஆம் ஆண்டில் 500 தனியார் பேருந்துகள், சென்னையில் இயக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் மேலும் 500 இயக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பேருந்து ஓட்டுநரை தனியார் நிறுவனமும், நடத்துநரை மாநகர போக்குவரத்து கழகமும் நியமிக்கும் என தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தனர். இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்தவர், “கூடுதலான பேருந்துகளை இயக்கவே தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டது. மக்கள் தொகை பெருகி வருவதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தனியார் பேருந்துகள் இயங்கினாலும் மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் திட்டமும், மகளிருக்கான சலுகையும் பாதிக்கப்படாது என்று  கூறியவர்,  ”சென்னையில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது எனவும் தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் அல்ல என்றார்.  மேலும், மாநகரப் பேருந்துகளை தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர்,  ”அதிமுக ஆட்சியில் தான் தனியார் பேருந்து தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சென்னையில் Gross cost contract (GCC) முறையில் 500 பேருந்துகளை இயக்கலாம் என உலக வங்கி வழிகாட்டுதல் வெளியிட்டது.

உலக வங்கி அளித்துள்ள கருத்துரை குறித்து ஆய்வு நடத்தவே டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னையில் எந்த வழித்தடத்தில் பேருந்துகள் பற்றாக்குறை இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த வழித்தடத்தில் மட்டும் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ”தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்த சாதியக்கூறுகளுக்கான ஆய்வறிக்கை வந்து பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்தான ஆய்வறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்தி பரவுகிறது என்ற அமைச்சர்,  உலக வங்கி டெண்டர் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்க அறிக்கை கொடுக்க வேண்டும், அரசு போக்குவரத்துக்கழகம், தனியார் என்றிருப்பதை இருவரும் இணைந்து செயல்படும் புதிய முயற்சியை உலக வங்கி வழங்கியுள்ளது. அதுகுறித்த சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே ஒப்பந்தப்புள்ளி. ஆய்வு செய்து அரசு முடிவெடுப்பதற்கு காலம் உள்ளது.

தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசு பணியாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள்,  தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கவே திட்டம் என்றவர், நாளையே தனியார் பேருந்துகள் இயக்கம் என்ற பதற்றத்தை ஏற்படுத்துவது தேவையில்லாத செயல.  “அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமே இந்த தனியார் பேருந்து சேவை என்றவர், திமுக கொண்டுவருவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது என்று கூறினார்.

டீசல் விலை உயரும் போதெல்லாம் கர்நாடகா மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, ஆனால், தமிழகத்தில் எந்தவித கட்டண உயர்வுமின்றி பேருந்து சேவையை அரசு வழங்கி வருகிறது  என்று கூறியவர், போக்குவரத்துத் தேவைக்காக உலக வங்கி சில நிபந்தனைகளை பரிந்துரைக்கிறது. அதில் சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயங்கும். அரசு நடத்துநர்கள் இருப்பார்கள், ஒட்டுநர் தனியாராக இருப்பார்

“தனியார் பேருந்து எந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும், எவ்வளவு கட்டணம் என்பது குறித்து அரசே நிர்ணயம் செய்யும் என்றவர்,  சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது, தொழிலாளர்களுக்கு பாதிப்பில்லை… போக்குவரத்து ஊழியர்கள் அதே நிலையில் தொடர்வார்கள் என்றார்.

மேலும், பேருந்துகளை அரசுடையமாக்கியது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அதே நிலையையே மு.க. ஸ்டாலினும் தொடர்வார்

இது அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. உலக வங்கியின் நிபந்தனைக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும் என அதிமுக ஆட்சிக்காலத்தின் அரசாணை உள்ளது.

இவ்வாறு கூறினார்.