டில்லி,

டந்த 19 நாட்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 19 வது நாளாக போராடி வருகின்றனர்.

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அனைத்துக்கட்சியினரும் அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று ராகுல்காந்தி நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

18 நாட்கள் கழித்து இன்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் டில்லி சென்று போராடி வரும் விவசாயிளை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளை பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் பழனிச்சாமி டில்லி வந்து விவசாயி களை சந்தித்து தீர்வு கண்டிருக்க வேண்டும்.. ஆனால் அவர் இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அவர்களின்  போராட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இறந்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், மத்திய ஆய்வுக் குழுவிடம் தமிழக அரசு முறையான அறிக்கை கொடுக்கவில்லை. அதன் காரணமாக நிதி கிடைக்கவில்லை என்றும், மத்திய அரசின் குழுவிடம் முறையாக அணுகி, தமிழக அரசு நிதி பெறாதது வேதனை அளிக்கிறது என்றும் கூறினார்.

போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்திக்க வேண்டும் என்றும், எனக்கு பிரதமரை சந்திக்க  அனுமதி கிடைத்தால் சந்தித்து விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசுவேன் என்றும் கூறினார்.

போராடி வரும விவசாயிகளின் பிரச்சினைகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், இதகு குறித்து  தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.