சென்னை: 27ந்தேதி  நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ‘ஜன பரீக்ஷா பே சர்ச்சா’ (தேர்வும் தெளிவும்’) நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து 10லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி ஆண்டுதோறும், இறுதித்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில், `தேர்வும் தெளிவும்’  (‘ஜன பரீக்ஷா பே சர்ச்சா’) நிகழ்ச்சி நடத்தி, அவர்களுடன் கலந்துரையாடுகிறார். .இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வித்துறை இணையமைச்சர்கள் அன்னபூர்ண தேவி, டாக்டர் சுபாஷ் சர்கார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு தேர்வு குறித்த மாணவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கி வாழ்க்கையை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு அவர்களை தயார் படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சி வரும் 27ந்தேதி நடைபெற உள்ளது.  ஏற்கனவே இந்த நிகழ்வு கடந்த 5 ஆண்டுகளாக, மத்திய கல்வி அமைச்சகத்தின்   வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 500 மாணவ, மாணவியர் பிரதமர் மோடியின் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவும்,   தனியார் பள்ளிகளில் பிரதமர் மோடியின் உரையாடலை வீடியோ மூலம் ஒளிபரப்பவும் தமிழ்நாடு பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு  பாஜக சார்பில் ஓவியப் போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் பிரதமர் மோடியின் கலந்துரையாடலில் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.

பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.என்.எஸ்.பிரசாத் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி,  இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு,  தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாட்டின்  ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியின் மாநில பொறுப்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்.  மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின்மிகப்பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.

அன்று காலை 11 மணி அளவில் டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமர்மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு காணொலி வாயிலாக பதில் அளிக்க உள்ளார். இதில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில், தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர், ஆசிர யர்களுடன் கலந்து கொள்கின்றனர்.

இது மட்டுமின்றி, innovateindia.mygov.in என்ற இணையதளம், Namo செயலி போன்றவை மூலமாக, தேர்வு தொடர்பான தங்களது ஆலோசனை, அனுபவம், கருத்து போன்றவற்றை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்பு எண் அறிவிப்பு: இதையொட்டி, மாணவர்கள் உள்ளிட்டோர் தேர்வு குறித்து சொல்ல விரும்புவதை தங்கள் குரலிலேயே பதிவு செய்வதற்கான வாய்ப்பை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது. ‘1921’ எனும் தொடர்பு எண் மூலமாக, தேர்வு குறித்த கருத்தை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பிரதமருக்கு தெரிவிக்கலாம்.

மாணவர்களுக்கு பிரதமர்ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளனர். அவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்வு குறித்துதங்களது அனுபவங்கள், ஆலோசனைகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.