சென்னை: அரசு ஊழியர்களுக்கு தமிழகஅரசு  பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் (பரிசுத் தொகை) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், “அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்கிட முதமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்ட மிகை ஊதியம் வழங்கப்படும்.

இதேபோல், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லறை செலவினங்கள் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ,1000 மிகை ஊதியம் வழங்கப்படும்.

மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.