சென்னை: மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்களை  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  சென்னையில் குற்ற சம்பவம் நடைபெறுவது புதிதல்ல.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவிகிதம் குற்றங்கள் குறைவாக நடைபெற்றுள்ளது. இருந்தாலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு, அதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

போதை பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்றவர், பள்ளி கல்லூரி வளாகங்கள் அமைந்திருக்கும் பகுதிகள் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும், போதை பொருட்களை கடைநிலையில் விற்பனை செய்பவர் மட்டு மின்றி, அதை சப்ளை செய்பவர்கள் வரை அதற்கு  மூலகாரணமானவர் உள்பட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

போதை பொருளிற்கு எதிராக 240 பள்ளிகளில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறிய ஆணையர்,  ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் போதை பொருளிற்கு எதிரான தன்னார்வலர்கள் ஒன்றிணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்களில் மற்றும் வழிதடங்கள் குறிப்பிட்ட நேரங்களில் காவலர்கள் தொடர்ந்து ரோந்து பயணம் மேற்கொள்கின்றனர்.

அதுபோல, தேவைப்படும் பட்சத்தில் புறநகர் ரயில்களில் காவலர்கள் பாதுகாப்பிற்கு பயணிப்பது போல, சென்னை மாநகர பேருந்திலும் இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் பயணிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.