வாஷிங்டன்: உலகின் சக்திவாந்த தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்விலும், பிரதமர் மோடியே முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், மீண்டும் பிரதமர் மோடியே முதலிடத்திற்கு வந்துள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள பிபிசி, ஹிண்டன்பர்க் போன்றவை இந்தியாவின் மீது குற்றச்சாட்டுக்களை வீசி வரும் நிலையில், அமெரிக்காவின், வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மார்னிங் கண்சல்ட் எனப்படும் உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனம், உலகின் சக்தி வாய்ந்த தலைவராக இந்திய பிரதமர் நரேந்திரமோடி முதலிடத்தில் இருப்பதாக பெருமைப்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி, அதன்  தரவரிசை பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்’ வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். உலக அளவில் மட்டுமின்றி, இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 78 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டும் எதிர்த்து வாக்கினை பதிவு செய்துள்ளனர். 4 சதவீதம் பேர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இரண்டாவது இடத்தில், மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 68 சதவீத வாக்குகளுடன்  உள்ளார். அவரை எதிர்த்து 28 சத வீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து அதிபர் ஆலைன் பெர்செட் 62 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பேன்ஸ் 58 சதவீத வாக்குகளைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரேசில் அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவருக்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் அவர் பின்தங்கி 7-வது இடத்தில் உள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து அதிபர் லியோ வரத்கர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான் செஸ், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்த வாக்கெடுப்பில், சீனா, ரஷ்யாவின் சர்வாதிகார ஆட்சி நடப்பதால் அந்த தலைவர்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தவில்லை என்று ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.