கோழிக்கோடு: துபாயில்இருந்து கேரளா வந்த ஏர்இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையில் தரையிறங்கும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த பகுதியை கேரள மாநில ஆளுநர், முதல்வர் பிரனராயி விஜயன் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக துபாயில் சிக்கியிருந்த 184 பேரை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கேரளா அழைத்து வந்த விமானம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானி, 5 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில்  இடைவிடாது பெய்யும் கனமழை, நிலச்சரிவு என போன்ற இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ததுபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்டமோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது. இது  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

191 பேர் பயணித்த இந்த விமான விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 190 பேர் பயணித்த விமானத்தில் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 120 பேர் லேசான காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளானவர்களின் விவரங்களை அறிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புகொள்ளும் வகையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கோழிக்கோடு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆய்வு மேற்கொள்கிறார் . அதேபோல கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இருவரும் நேரில் ஆய்வு செய்ய கோழிக்கோடு விமான நிலையம்  செல்கின்றனர்.

முன்னதாக தற்காலிகமாக கோழிக்கோடு விமான நிலையம் மூடப்பட்டு கோழிக்கோடு வரும் விமானங்கள் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.