டில்லி

வெளிநாட்டுப் பொருட்களை தொடர்ந்து எதிர்த்து வரும் பதஞ்சலி நிறுவனம் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய உள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவிய பதஞ்சலி நிறுவனம் உணவு, அழகு சாதனம் உள்ளிட்ட பல பொருட்களை வர்த்தகம் செய்து வருகிறது.    ஆரம்ப முதலே உள்நாட்டு நிறுவனம் மற்றும் தேசியம் ஆகிய சொற்களுடன் களம் இறங்கிய பதஞ்சலி நிறுவனம் வெளி நாட்டு நிறுவனங்களான இந்துஸ்தான யுனிலீவர், பிராக்டர் அண்ட் கேம்பிள் உள்ளிட்ட பல நிறுவனப் பொருட்களை எதிர்த்து வர்த்தகம் செய்தது.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றதால் பாபா ராம்தேவ்  வரும் 2025க்குள் பதஞ்சலி உலக அளவில் பெரிய நிறுவனமாகும் எனக் கூறி வந்தார்.   ஆனால் ஆரம்பத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் ஆதரவு குறையத் தொடக்கியது.   இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த நிறுவனம் அளித்த அதே ஆயுர்வேதப் பொருட்களை மற்ற நிறுவனங்களும் அளிக்கத் தொடங்கியதாகும்.

ஆரம்பத்தில் மிகுந்த தரத்துடன் காணப்பட்ட பதஞ்சலியின் தரம் பிறகு குறையத் தொடங்கியது.   அநித நிறுவனத்தின் சில பொருட்கள் உணவு பாதுகாப்பு விதி அமைப்பு நடத்திய சோதனையில் தோல்வி அடைந்தது.    அத்துடன் வாட்ஸ்அப்  நிறுவனத்துக்குப் போட்டியாக தொடங்கப்பட்ட  கிம்போ செயலியும் வரவேற்பு பெறவில்லை.   சென்ற மாதம் வங்கிகள் அளித்த தர வரிசையில் பதஞ்சலி பின்னுக்குச் சென்றுள்ளது.

தற்போது இந்த நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன   அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆசார்ய பாலகிருஷ்ணா, “பதஞ்சலி நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய மூன்று,  நான்கு  சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வ்ருகின்றன.  நாங்கள் எங்களுடைய நன்மதிப்பு கெடாத வகையில் வெளிநாட்டு வர்த்தகம் நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. “ எனத் தெரிவித்துள்ளார்.