டெல்லி: நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல விமானம் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென்று ஒருவர் எழுந்து எமர்ஜென்சி கதவை பலவந்தமாக திறக்க முயன்றுள்ளார். அதை கண்ட சக பயணிகள் அதிர்ச்சி அடைய விமான பணியாளர்களும் சக பயணிகளும் இணைந்து அந்த பயணியை பிடித்துள்ளனர்.

விமானம் அவசர அவசரமாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.