டெல்லி:  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கும் நிலையில், இன்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதுபோல,  மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி, நாளை இரு அவைகளின் கூட்டு கூட்டம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,   ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி பிரதமர் மோடி நேற்று மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் கொள்கை முயற்சிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. பிற்பகலில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என தகவல்கள் பரவிய நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில்,  கடந்த ஆண்டு (2022)  ஜூலை மாதம் 25-ந் தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட முர்மு, முதமன்முறையாக நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நாளை உரையாற்றுகிறார்.

இதைத்தொடர்ந்து,  முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித்துறைகள் உள்ளிட்ட எதிர்கால கண்ணோட்டத்தையும் மதிப்பாய்வு செய்யும் வகையில் இருக்கும்.  மேலும், இந்த பொருளாதார ஆய்வறிக்கை, முக்கிய கொள்கை முடிவுகளுக்கு முன்னோடியாக அமைவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் விரிவான புள்ளிவிவர தரவு மூலம் முந்தைய முடிவுகளின் தாக்கத்தையும் மதிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாளான  நாளை மறுதினம் (பிப்ரவரி 1-ந் தேதி) காலை 11 மணிக்கு மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர்  தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட்  என்பதுடன் காகிதமில்லா பட்ஜெட் இதுவாகும். அவரது பட்ஜெட் உரை நேரடியாக மக்களவை டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. பின்னர் மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் வைக்கப்படுகிறது.

2024ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல்  நடக்க உள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டா இது என்பதும், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்ஜெட் தொடரின் முதல் இரு நாட்களில் மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி கேள்வி நேரமும், பூஜ்ய நேரமும் இடம் பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 2-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இரு சபைகளிலும் நடக்கிற விவாதத்தின் முடிவில், பிரதமர் மோடி பதில் அளித்து பேசுவார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி முடிவுக்கு வருகிறது.

இரண்டாவது அமர்வு, மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி மத்திய அரசு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. இதில் தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு, அண்ணா தி.மு.க. சார்பில் தம்பிதுரை, தா.ம.க. சார்பில் ஜி.கே. வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பார்லிமெண்டில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.