சென்னை: பழனி கோவில் சொத்து வழக்கு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான பல நூறு கோடி சொத்துக்கள், ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளும் சுரண்டப்பட்டு வருகின்றன. பல சொத்துக்கள், தனியாருக்கு கைமாற்றப்பட்டுள்ள நிலையில், பல சொத்துக்களுக்கு வாடகைகளும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டு, கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பலர் 220 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். இந்த நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை  கண்டறிந்து மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிந்து, மீட்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறை எடுக்கவில்லை,.

இதையடுத்து,  பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவை அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் இந்த விவகாரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததது. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கடிந்துகொண்ட நீதிபதி, அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர்,  பழனி  கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்பது தொடர்பாக அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த கூட்டத்தை பிப்ரவரி 1-ந்தேதி முதல் 9-ந்தேதிக்குள் கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.