டில்லி:

பக்கோடா விற்பனை செய்வதும் ஒரு வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் மோடி கூறியதன் மூலம் ஒரு தந்தையில் வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று எம்.பி. நீரஜ் சேகர் கூறினார்.

ராஜ்யசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யும், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனுமான நீரஜ் சேகர் பேசுகையில், ‘‘பக்கோடா விற்பனை செய்வதும் ஒரு வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் மோடி கூறியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எந்த வேலையும் தாழ்ந்தது கிடையாது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

ஆனால், தொழிலாளர் கண்ணியம் என்பது முக்கியம். தனது மகனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ஒரு தந்தையின் வலியை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தனது மகனை படிக்க வைக்கும் அமித்ஷாவுக்கு இந்த வலி தெரியும் என்று நினைக்கிறேன்.

எந்த தந்தையும் தனது மகன் பக்கோடா விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார். பக்கோடா விற்பனை செய்பவரின் மகன் பக்கோடா விற்பனையாளராக மாற வேண்டும் என்ற ரீதியில் பிரதமர் பேசியுள்ளார்’’ என்றார்.