லாகூர்:
பாகிஸ்தானில் கல்யாண மாப்பிள்ளைக்கு ஒரு வினோதமான திருமண பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கிதான் அந்த வினோத பரிசு.

பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில், கல்யாண மாப்பிள்ளைக்கு, அவரது மாமியாரே ஏகே 47 துப்பாக்கியை திருமண பரிசாக அளித்துள்ளார். மாமியார் பரிசு வழங்கும் சடங்கிற்கு பாகிஸ்தானில் கலாஷ்நிகோவ் என்று பெயர். ஆனால் இந்த பாகிஸ்தான் திருமண வைபவத்தில், ஒரு மாமியார் பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கியை பரிசளிக்கிறார்.அதை கூடியிருந்த விருந்தினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள்.

இப்படி ஒரு பயங்கரமான ஆயுதத்தை மாமியார் பரிசளிக்கும் போது,மாப்பிள்ளையின் முகத்தில்,எந்த அதிர்சசியும் ஆச்சரியமும் காணப்படவில்லை. அவர் இதை எதிர்பார்த்து காத்து இருந்ததைப்போலவே இந்த நிகழ்வு இருந்தது. ஒருவேளை இவர்கள் திருமணத்தில் துப்பாக்கி பரிசாக அளிப்பதே ஒரு சடங்காக இருக்குமோ என்றும் சிலர் சமாதானங்கள் கூறுகின்றனர்.

சாதாரணமாக, மிகப்பெரிய விளையாட்டுப்போட்டிகளில் அல்லது திருமணங்களில் வானை நோக்கி சுடுவது என்பது தெற்காசிய நாடுகளில் சம்பிரதாயமான ஒரு விஷயம். ஆனால் இப்படி கல்யாண மாப்பிள்ளைக்கு துப்பாக்கியை பரிசளிப்பது என்பது எந்த நாட்டு பாரம்பரியமும் கிடையாது.

எது எப்படியோ, இந்த வினோதமான பரிசு வழங்கும் காணொளி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதே சமயம், திருமணப்பெண்ணான தன மகளிடமிருந்து காத்துக்கொள்ளவே மாமியார் மருமகனுக்கு இப்படி ஒரு ஆயுதத்தை பரிசாக கொடுத்துள்ளாரோ என்ற வேடிக்கை பேச்சும் எழாமல் இல்லை.

அதே சமயத்தில், பாகிஸ்தானில் இப்படி கட்டுப்பாடற்ற ஒரு ஆயுத கலாச்சாரம் பரவி கிடப்பதை பலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர்.