வாஷிங்டன்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் கூறி உள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதையும் உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.  பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பல முறை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  ஆயினும் அந்நாடு தனது போக்கை மாற்றிக் கொள்ளத்தால் பல உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி, “எப்போதுமே பாகிஸ்தானுடன் அமெரிக்கா  நேர்மையாக இருக்கிறது.  மேலும் அமெரிக்கா  பயங்கரவாத தடுப்பில் தன் அக்கறையைப் பாகிஸ்தானிடம் வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறது.  இருந்தாலும் பாகிஸ்தானால் ஆப்கான் எல்லையில் இப்போதும் பயங்கரவாதிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தானுக்கும் பங்கு இருக்கிறது.  ஆகவே எங்கள் கவலையை பாக்., தலைவர்களுடன் வெளிப்படையாகப் பேச விரும்புகிறோம்.  ஆப்கான் எல்லையில் உருவாகும் பயங்கரவாதத்தால் மற்ற நாடுகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் மக்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதை அந்நாடு உணர வேண்டும் “எனத்  தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் பாகிஸ்தான் ‘தங்களுக்கு எதிராக தெஹ்ரிக் இ தாலிபான் போன்ற அமைப்புகள் ஆப்கானில் இருந்துசெயல்பட  தூண்டிவிடப்படுகின்றன’ என குற்றம்சாட்டி உள்ளது.