மும்பை

ந்திய தணிக்கைக் குழு அனுமதி அளித்தும் 5 மாநிலங்களில் பத்மாவத் இந்தித் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் கதையை மையமாக கொண்டு தயாரிக்கப் பட்டுள்ள இந்தித் திரைப்படம் பத்மாவத்.   இந்தப் படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.   இதன் இயக்குனரான சஞ்சய் லீலா பஞ்சாலி மற்றும் கதாநாயகி தீபிகா படுகோனே வுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது,

அதன் பிறகு பத்மாவதி என பெயரிடப்பட்ட இந்தப் படம் தணிக்கைக் குழுவின் உத்தரவுக்கிணங்க பத்மாவத் என மாற்றப்பட்டு சில காட்சிகள் நீக்கப்பட்டது.   ஒரு பாடல் காட்சி மாற்றி அமைக்கப்பட்டது.   அதையொட்டி தணிக்கைக் குழு இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

படக் குழுவினர் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று இந்தப் படத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளனர்.   இந்தியா மற்றும் உலகெங்கும் 60 நாடுகளில் இந்தப் படம் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான், அரியானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தப் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.   சமீபத்தில் குஜராத் மாநில முதல்வர்  விஜய் ருபானி இந்தப் படம் குஜராத்தில் வெளியாகாது என அறிவித்துள்ளார்.

மொத்தத்தில் ஐந்து மாநிலங்களில் இதுவரை இந்தப் படம் தடை செய்யப்பட்டுள்ளது.    கோவா மாநில போலீசார் இந்தப் படத்தை வெளியிட தடை செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பீகாரிலும்  இப்படத்தை தடை செய்வது பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த தடை திரைப்பட தயாரிப்புக் குழுவினரிடமும்,  ரசிகர்கள் மத்தியிலும் மீண்டும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.