டில்லி

பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

நேற்று மக்களவை  கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, “மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என கோஷம் எழுப்பினர். விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.

சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களைச் சமாதானப்படுத்தி கேள்வி நேரத்தைத் தொடர்ந்து நடத்த முயன்றது பலன் அளிக்கவில்லை. எனவே, அவையை மதியம் 2 மணி வரை அவர் ஒத்தி வைத்தார். மீண்டும் மதியம் மக்களவை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் அமலாக்கத் துறை விவகாரத்தை எழுப்பி கோஷங்கள் எழுப்பினர். இதனால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதைப் போல் மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தும் விவகாரம், அக்னி பாதை திட்டம் உட்படப் பல விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான அறிக்கை கொடுத்தனர்.  மாநிலங்களவை தலைவர்  வெங்கய்ய நாயுடு அவற்றை நிராகரித்தார்.

மத்திய அரசு எதிர்க்கட்சிகளை அடக்க, தன்னாட்சி மிக்க விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.  ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி நிலவி அவையை நண்பகல் 12 மணி வரை வெங்கய்ய நாயுடு ஒத்தி வைத்தார்.

மீண்டும் அவை கூடியதும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா மற்றும் இதர கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவைத்தலைவர் அமைதியை கடைப்பிடிக்கத் தொடர்ந்து வலியுறுத்தியும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே கேள்வி நேரம் நிறைவடைந்தது.