சென்னை:

ரூ.12.2 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இது 2021ம் ஆண்டு முதல்  செயல்படத் தொடங்கும் என  அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.

மேலும், கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், சிவகணை ஆகிய இடங்களில் ஜனவரி 15ம் தேதி முதல் மீண்டும்  அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், மத்திய தொல்லியல் குழுவினனர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதுவரை 5 கட்ட அகழ்வராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

ஐந்தாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட, 900 பொருட்கள் கண்டறியப்பட்டன .’இந்தப் பொருட்களை, தற்காலிகமாக பார்வையாளர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; அதை கீழடியிலேயே நடத்த வேண்டும்’ என, பலரும் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே  அகழ்வாய்வின்போது  கிடைத்த பொருட்கள்  2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கீழடியில் அகழாய்வில் கிடைத்த 6 ஆயிரத்து 720 தொல்லியல் பொருட்களை புகைப்படங்களாக நுங்கப்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சுதை சிற்பங்களும், சூது பவள மணிகளும், விளையாட்டுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த புகைப்படக் கண்காட்சியை மாஃபா பாண்டியராஜன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர்,   கீழடியில் ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருவதாகவும்,  இதனை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் மக்கள் பார்வையிடலாம் என்று  தெரிவித்தார்.

சீனாவுடன் கலாச்சார பரிமாற்றம் செய்ய தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தவர், பள்ளி மாணவர்களை அருகில் இருக்கும் அருங்காட்சியகத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.