சென்னை

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 56 ஆகக் குறைந்துள்ளது.

சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.   சென்ற மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 2400 ஆக இருந்த நிலையில் தற்போது ஆயிரத்துக்குச் சற்றே அதிகமாக உள்ளது.  விரைவில் இது மேலும் குறைந்து 3 இலக்கமாக மாறும் என சென்னை மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் தற்போது சிகிச்சைபெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.   இதுவரை 99,974 பேர் பாதிக்கப்பட்டு அதில் 2110 பேர் உயிர் இழந்துள்ளனர்.  மொத்தம் 84900க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து தற்போது 12000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதனால் சென்னை நகரில் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

நேற்றைய கணக்குப்படி சென்னையில் 56 கட்டுப்பாடு பகுதிகள் மட்டுமே உள்ளன.  இந்த 56 பகுதிகளும் சென்னையில் 6 மண்டலங்களுக்குள் உள்ளன.  ஆகவே தற்போதைய நிலைப்படி சென்னையில் 9 மண்டலங்களில் கட்டுப்பாடு பகுதிகள் இல்லை என்னும் நிலை உண்டாகி இருக்கிறது.

அதாவது திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம் தண்டையார்பேட்டை, அம்பத்தூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர்,பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ஒரு கட்டுப்பாடு பகுதிகள் கூட கிடையாது.