சேலம்: ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஒருநாள் லோக் ஆதாலத் நடத்தப்பட வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,.  முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார். மேலும்,  தமிழ்நாட்டில், 272 நீதிபதிகள் உட்பட 5649 நீதிமன்ற ஊழியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சேலம் மாவட்டம் காந்தி ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஓய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், அகில பாரத ஆதிவக்த பரிஷத்யின் தலைவர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் உள்பட ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய  சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுவாமிநாதன்,  திறமையும், உழைப்பும் இருந்தால் வழக்கறிஞர் தொழிலில் வெற்றி பெறலாம் என்று கூறியதுடன்,  மூத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் நீதிமன்றத்தில் எவ்வாறு வாதம் செய்கின்றனர் என ஆராய்ந்து செயல்பட்டால் நிச்சயம் இளைய வழக்கறிஞர்கள் வெற்றி பெற முடியும் என கூறினார்.

இறுதியில் சிறப்புரையாற்றிய  உச்சநீதிமன்ற  முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்,  அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த 13ஆண்டு காலமாக செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும் எனவும், நீதிமன்றங்களில் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் அதிக அளவில் வந்துள்ளதால் வழக்கு களை விரைந்து முடிக்க வசதிகள் வந்துள்ளது. வழக்கறிஞர்கள் தொழில் உன்னதமான தொழில். அவற்றை முறையாக செயலாற்ற வேண்டும்  இப்போது உள்ள இளைய வழக்கறிஞர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து வழக்குகளை முடிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கை மாறிவிடக் கூடாது   272 நீதிபதிகள் உட்பட 5649 நீதிமன்ற ஊழியர்களின் காலிப் பணியிடங்கள் உள்ளது. அதனை விரைந்து நிரப்பிடமாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், நீண்ட வருடங்களாக இருக்க கூடிய வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலக் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர்,. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஒவ்வொரு மாதமும் மாவட்டந்தோறும் சென்று மாவட்ட நீதிபதி மற்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து தேவையானவற்றை நிறைவேற்றிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனு ஏழு ஆண்டுகளாக உள்துறை அமைச்சகத்திடமே இருந்தது. உரிய நேரத்தில் முறையான பதில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்போது 7 பேருக்கும் விடுதலை கிடைத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.