ஒடிசா:
டிசா மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரத் துறை அமைச்சராகவும் பிஜு ஜனதாதளத்தின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா தாஸ். இன்று ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றார். வாகனத்தில் இருந்து இறங்கும்போது நபா தாஸ் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

பலத்த பாதுகாப்பையும் மீறி நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபா தாஸுக்கு மார்பில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.