Noise over Kupwara attack aimed to spread hate against Muslims: Farooq Abdullah

முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் திட்டமிட்டே சில பிரச்னைகள் உரத்துப் பேசப்படுவதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள்  முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில், மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அளவுக்கு மீறி அனைவரும் கூச்சலிடுவதாக பரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்காகவே திட்டமிட்டு குப்வாரா சம்பவம் குறித்து உரத்துப்பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்துக் கூட இந்த அளவுக்கு அதிகம் யாரும்  பேசவில்லை எனவும் பரூக் குறைகூறி உள்ளார். இணையதள சேவைகளை முடக்கி வைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், ஒடுக்குமுறை ஆவேசத்தை அதிகரிக்க உதவுமே அன்றி, பிரச்னைக்குத் தீர்வு காண உதவாது என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவது ஒன்றுதான் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான சுமூக வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.